மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

முடி - கரு கரு கூந்தல் (To Grow Black Hair)

 

01.  அவுரி இலைச் சாறு, மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மி.லி அளவு எடுத்து 500 மி.லி தேங்காய் எண்ணையில் கலந்து, அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும், 35 கிராம் தான்றிக் காயும் அரைத்துக் கலந்து காய்ச்சிப் பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும். முடி கருத்து தழைத்து வளரும். அத்துடன் பித்தம் தணியும்.

 

02.  ஆவாராம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரைக் கிலோ,  எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு,  தேவையான போது இரண்டு தேக்கரண்டி மாவை எடுத்து வெந்நீரில் கரைத்து  வாரம் இருமுறை தலையில் தேய்த்து  அலசி வந்தால், கரு கரு கூந்தலைப் பெறலாம்.

 

03.  ஆலமரத்தின் இளம் பிஞ்சு, காய், வேர், செம்பருத்திப் பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்னெயில் போட்டுக் காய்ச்சி ஊறவைத்து, எண்ணெயைத்  தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நன்கு கறுப்பாக வளரும். (918)

 

04.  எலுமிச்சம் பழச் சாறுடன் சம அளவு காரட் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறு கறுவென வளரும்.(911)

 

05.  கறிவேப்பிலை சாறு, சீயக்காய், தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி,  மூன்றையும் எடுத்து கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்த பின் குளித்து வந்தால் கரு கரு கூந்தலைப் பெறலாம்.

 

06.  கறிவேப்பிலையை அரைத்து தேங்காயெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, வடிகட்டி,  தலைக்குத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும், கறுப்பாகவும் வளரும்.( 909)

 

07.  செம்பருத்திப் பூவின் சாற்றில் ஒரு பங்கும், கறி வேப்பிலைச் சாற்றில் ஒரு பங்கும் எடுத்து , இவற்றுக்குச் சமமாகத் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி வடித்துத் தடவி வந்தால் கூந்தல் கருமையாகவும் பளபளப்புடனும் இருக்கும்.

 

08.  செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால், முடி கறுத்து  அடர்ந்து வளரும்.

 

09.  செம்பருத்திப் பூ, ஆலமரத்தின் இளம் பிஞ்சு, ஆலங்காய், ஆலமர வேர் ஆகியவற்றை எடுத்து இடித்து தூளாகி, தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, ஆறவைத்து, தலைக்குத் தேய்த்து வந்தால், முடி கறுப்பாக வளரும். (918)

 

10.  சோற்றுக் கற்றாழைச் சாறும் நெல்லிக் காய்ச் சாறும் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஆறிய பின் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுப்பாக வளரும் (1752)

 

11.  தேங்காய் எண்ணையில் செம்பருத்தியின்  காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்

 

12.  வெந்தயத்தை தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தடவி வந்தால் முடி நீளமகவும் கருமையாகவும் வளரும்.

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================