01. ஓமத் தண்ணீர் தினமும் சிறிதளவு குடித்தால் உடல் சோர்வு நீங்கும். ஓமத்தை துணியில் கட்டி மோந்து பார்த்தால், மூக்கடைப்பு, சைனஸ் நீங்கும்
02. ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து, அதில் 5 கிராம் எடுத்து, சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பந்து போல் கட்டி நுகர்ந்தால், சளி ஒழுகுதல், மூக்கடைப்பு குறையும்.
03. கடுக்காய்ப் பொடி, நெல்லிக் காய்ப் பொடி இரண்டையும் கலந்து அதிலிருந்து அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி ஆகியவை குணமாகும்.(110)
04. கொத்துமல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால், மூக்கடைப்பு நீங்கும்.
05. தும்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலை முழுகி வர, தலைப் பாரம், ஒற்றைத் தலை வலி, நீரேற்றம், மூக்கடைப்பு நீங்கும்.
06. நெல்லிகாய்ப் பொடி, கடுக்காய்ப் பொடி இரண்டையும்
கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, சளி குணமாகும்.
(110)
07. நெல்லிகாய்ச் சாறில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தேனில் குழைத்து
சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு தீரும். (154)
08. நொச்சி இலையை மெல்லிய
துணியில் திணித்து தலையணையாகப் பயன்படுத்தினால், மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) தீரும்.
09. மஞ்சளைச் சுட்டு, புகையை நுகர்ந்தால் தலை நீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்
10. மிளகு ஐந்தாறு எடுத்து ஒரு ஊசியில் கோத்து நல்ல விளக்கில் காட்டி சுட்டு, அதிலிருந்து எழும் புகையை மூக்கில் இழுத்தாலும் மூக்கடைப்பு நீங்கும்.
11. மிளகுத் தூள் சிறிது எடுத்து தேன் சேர்த்து நெல்லிக் காய்ச் சாற்றில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பு தீரும்.(154)
12. ரோஜா (புதிய மலர்) மலரை முகர்ந்தால், மூக்கடைப்பு சரியாகும்.(142)
13. விரலி மஞ்சளை எடுத்து எள் எண்ணெயை அதைச் சுற்றிலும் தடவி நல்ல விளக்கில் மஞ்சளைச் சுட்டு அதிலிருந்து எழும் புகையை மூக்கின் வலப்பக்கம் இடப்பக்கமாக இரு துளைகளிலும் மாறி மாறி உள்ளுக்கு இழுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் இரண்டு நாள்கள் இப்படிச் செய்தால் மூக்கடைப்பு, தலைப் பாரம், சளி, இருமல் எல்லாம் போய்விடும். (ஆதாரம்: ”நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல், பக்கம் 205)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}
==========================================================