மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூட்டு - வீக்கம் (Joint Swelling)

 

01.   ஆடாதொடை இலை, நுணா இலை, வாதநாராயணன் இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து, இத்துடன் 50 கிராம் உளுந்து, தலா அரை தேக்கரண்டி மஞ்சள், கடுகு, சேர்த்து, முட்டையின் வெள்ளைக் கரு விட்டு நன்கு அரைத்து  கழுத்து வலி, மூட்டு வீக்கம், மூட்டு வாதம், இடுப்பு வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

 

02.   உடலில் இருந்து யூரிக் அமிலத்தை (Uric Acid) வெளியேற்றும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. ஆதலால் மூட்டு வலி, மற்றும் மூட்டு வீக்கத்தைக் குணப்படுத்தும்.

 

03.   ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக் கட்டிகள், அண்ட வாயு, தாய்ப் பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

 

04.   கடுகு சிறிதளவு, முருங்கைப் பட்டை, பெருங்காயம் ஒரு துண்டு, மூன்றையும் சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப் போடலாம்

 

05.   கற்றாழை மடலைக் கீறினால் வரும் மஞ்சள் நிறத் திரவத்துடன், முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து, சிறிது மஞ்சள் கலந்து, கால் முட்டி வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும்.

 

06.   சதகுப்பை, ஆளி விதை, ஆமணக்கு விதை  ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மூட்டு வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்

 

07.   சுக்குத் தூள் 5 கிராம், விளக்கெண்னெய் 5 மி.லி கலந்து கொதிக்க வைத்து தொடர்ந்து 48 நாட்கள் இரவில் உட்கொண்டு வந்தால், மூட்டு வலி, மூட்டு வீக்கம் விலகும்.

 

08.   சுக்கை நீர் விட்டு நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து, சூட்டுடன் மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும். (318)

 

09.   தர்பூசணி விதையில் (Lysine)  என்று சொல்லக் கூடிய அமினோ அமிலம் இருப்பதால், அவை இணைப்புத் திசுக்கள் உருவாகத் துணை புரியும். தர்பூசணி விதைகளைப் பொடித்து ஒன்று முதல் மூன்று கிராம் அளவு உட்கொண்டால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குணமாகும்.

 

10.   தொட்டாற் சுருங்கி இலைகளை அரைத்து வைத்துக் கட்ட விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் ஆகியவை  குணமாகும்.

 

11.   பவளமல்லியின் நான்கு அல்லது ஐந்து இலைகளை எடுத்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தினமும் இரண்டு வேளை 50 அல்லது 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்

 

12.   பிரமிப் பூண்டினை விழுதாக அரைத்து மூட்டின் மீது பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.

 

13.   பூவரசங் காயிலிருந்து வெளிவரும் மஞ்சள் நிறப் பாலை  எச்சில் தழும்புகளில் பூசினால் குணமாகும். மூட்டு வீக்கங்களுக்குப் பூச, வீக்கம் கரையும்.

 

14.   முருங்கை இலையில் கால்சியம் சத்து இருப்பதால், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்

 

15.   வெள்ளரிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறையும்.

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக