மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

குடல் - புழு (Intestinal Worms)

 

01.  அகத்தியானது உணவைச் செரிப்பிக்கும். இடுமருந்தின் தோடத்தை நீக்கும். குளிர்ச்சியுண்டாக்கும். மலமிளக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.

 

02.  ஆடு தின்னாப் பாளை இலைகளைக் கழாயம் செய்து குடித்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.(695)

 

03.  உத்தாமணி இலையின் குடிநீரை. ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு சங்கு அளவு குழந்தைகட்குப் புகட்ட, வயிற்றிலுள்ள புழு வெளிப்படும்.

 

04.  எருக்கம் இலைச் சாறு மூன்று துளியை பத்து துளி தேன் கலந்து  கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.  (குழந்தைகளுக்குக் கூடாது) (674)

 

05.  கருஞ்சீரகத்தை தும்மட்டிக்காய் சாறு விட்டு அரைத்து விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.(675)

 

06.  குப்பைமேனி இலைச் சாறு அல்லது குடிநீர் செய்து சிறியவர்களுக்கு 2 தேக்கரண்டி வரைக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்யும்;  கோழையை அகற்றும்; வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

 

07.  கோரைக் கிழங்கின் சாறினைக் குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்

 

08.  கோரைக் கிழங்கும் இஞ்சியும் சம அளவு எடுத்து தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு சாப்பிட்டால் சீதபேதி கட்டுப்படும். குடல் புழுக்கள் வெளியாகும்.

.

09.  சுண்டைக்காய் [சிறியது] அளவு நிலவேம்பு இலையை அரைத்த விழுதை  உட்கொண்டால், வயிற்றுப் புழுக்கள் அழியும்.

 

10.  நந்தியாவட்டை வேரினை ஒரு துண்டு எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு அரை தம்ளராக சுண்டக் காய்ச்சி இரவில் மட்டும் குடித்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

 

11.  நிலவேம்பு இலைத் தூள் ஐந்து கிராம் எடுத்து  காலையில் உட்கொண்டால் வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். ஐந்து இலைகளுடன் 10 சீரகம் சேர்த்தும் மென்று சாப்பிடலாம்.

 

12.  நொச்சி வேரைக் குடிநீர் செய்து  கொடுத்தால் வளியை (வாதம்) போக்கி நீர்ப்பை அழற்சியை நீக்கும். இதை வயிற்று வலி, வயிற்றுப்புழு நோய் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம்.

 

13.  பப்பாளிப் பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அழியும்.

 

14.     பவளமல்லி இலை சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது உப்பும் சேர்த்து வாரம் ஒரு முறை 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கிவிடும்.

 

15.  மாதுளம் பழம் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட்டால் குடற் புழுக்கள் அழிந்துவிடும்.(694) (1144)

 

16.     மாதுளை மரப் பட்டையைப் பொடித்து 2 – 3 கிராம் அளவு எடுத்து, வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் மடிந்து விடும்.

 

17.  முருங்கை ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கும் சேர்த்து, குடிநீர் செய்து மூன்று நாட்கள் இரவில் 60 மி.லி வீதம் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

 

18.  வேப்பங்கொழுந்து ஒரு கைப்பிடி எடுத்து மைய அரைத்துச் சாறு பிழிந்து ஒரு பாலாடை எடுத்து அரைப் பாலாடை தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். காலை மாலையாக மூன்று நாள்கள் இவ்வாறு கொடுக்க வேண்டும். 15 நாள்கள் கழித்து குப்பை மேனி இலைகள் இரண்டு கைப்பிடி எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ஒரு தம்ளராகச் சுண்டியவுடன்  எடுத்து ஆறவைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கச் செய்யவேண்டும். இரண்டு மூன்று முறை பேதியாகும். இவ்வாறு செய்தால் குடலில் உள்ள புழுக்கள், நாடாப்புழுக்கள் எல்லாம் மடிந்து விடும். (ஆதாரம்: ‘நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

19.  வேப்பம் பூவை [நாட்பட்ட பழைய பூ] நெய் விட்டு வதக்கி, உப்பு, சுட்ட பழம் புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலைக் கூட்டி, துவையல் செய்வது போலச் செய்து சோற்றுடன் கலந்துண்ண, பெருமூர்ச்சை, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நீடித்த வாத நோய், ஏப்பம், வயிற்றுப் புழு ஆகியவை போகும்.

 

20.  வேப்பம் விதை மூன்று கிராம் எடுத்து சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலையாக நீண்ட நாள் சாப்பிட்டு வந்தால், தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல்புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

 

21.  வேலிப் பருத்தி இலைச் சாறு எடுத்துக் கொதிக்க வைத்து ஒரு சங்கு அளவு புகட்டினால் வயிற்றுப் புழு வெளியேறும்.  வசம்பு   சுட்ட தூள் சேர்த்துக் கொடுத்தால் வயிற்று மந்தம் நீங்கும்.(659)(1176)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக